மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடந்த மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க அதிகப்படியான இடங்களைப் பிடித்துள்ளது. மும்பையில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பா.ஜ.க மேயர் பதவியைப் பிடித்திருக்கிறது.
இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தனித்துப் போட்டியிட்டது. பா.ஜ.க-வும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. மாநகராட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மேயர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சில மாநகராட்சிகளில் மேயர் பதவியைப் பிடிப்பதில் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. சந்திராப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 66 உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 27 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
பா.ஜ.க-விற்கு 23 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 6 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இதில் மேயர் பதவியைப் பிடிக்கும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை.
இதையடுத்து மேயர் பதவியைப் பிடிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய், உத்தவ் தாக்கரேயின் இல்லத்திற்குச் சென்று அக்கட்சியின் ஆதரவைக் கோரினார்.
அதோடு துணை மேயர் பதவி கொடுப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால் மேயர் தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தது.
இதனால் பா.ஜ.க வேட்பாளர் 32 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 31 வாக்குகள் பெற்றார். ஒரு வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இங்கு ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி ஒட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது. இதுவும் பா.ஜ.கவிற்குச் சாதகமாக அமைந்தது.
சிவசேனா இரண்டாக உடைந்ததில் பா.ஜ.க முக்கிய பங்காற்றியதாக உத்தவ் தாக்கரே தொடர்ந்து கூறி வரும் நிலையில் பா.ஜ.க வேட்பாளருக்கு அவரது கட்சி ஆதரவு கொடுத்து இருக்கிறது. காங்கிரஸ் மேயர் பதவியில் தோல்வி அடைந்ததற்கு உட்கட்சி பிரச்னையே காரணம் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய் மற்றும் காங்கிரஸ் எம்.பி பிரதிபா ஆகியோர் இடையேயான மோதல் காரணமாகவே காங்கிரஸ் தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம் பா.ஜ.க மூத்த தலைவர் சுதிர் முங்கந்திவார், உத்தவ் தாக்கரே கட்சிக்கு 15 மாத மேயர் பதவி கொடுப்பதாகக் கூறி தங்களது பக்கம் இழுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.




