புதுக்கோட்டை மாநகர தி.மு.க செயலாளராக இருந்த அமைச்சர் ஆ.செந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கே.என்.நேரு ஆதரவாளராக இவர் இருந்து வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அந்த பதவிக்குக் கட்சியின் சீனியர்கள், இளைஞர்கள் எனப் பலரும் முயற்சித்ததோடு, அந்த பதவியை பெறுவதற்காக கட்சித் தலைமையை அணுகி வந்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசிய அமைச்சர் நேரு, மறைந்த மாநகரச் செயலாளர் செந்திலின் மகனுக்கு மாநகரச் செயலாளர் பதவி கிடைக்க அனைவரும் பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாகச் சொல்லப்பட்டது.
இதற்குக் கட்சி நிர்வாகிகள் பலரும் தலையசைத்தாலும், மறைமுகமாக இந்தப் பதவியை எதிர்பார்த்திருந்த பலரும் அதற்காக தலைமையிடம் தனித்தனியாக முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவின் ஆதரவாளரான, தி.மு.க புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜேஷ் என்பவரை புதுக்கோட்டை மாநகர பொறுப்பாளராக நியமனம் செய்வதாக தி.மு.க மாநில பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்தார்.
இந்நிலையில், ‘அவர் கட்சிக்காக உழைக்கவில்லை. உண்மையாக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை. அதனால், அவரை மாற்ற வேண்டும்’ என்று கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை மாற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுப்பட்டனர். இந்நிலையில், புதுக்கோட்டை திலகர் திடலில் நடத்துவதாக இருந்த தி.மு.க பொதுக்கூட்டம் மழை காரணமாக ஒரு தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்டது.

தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் நடைப்பெற்ற அந்த கூட்டத்தில் புதிய மாநகரப் பொறுப்பாளர் ராஜேஷூம் கலந்து கொண்ட நிலையில் அங்கிருந்த மாநகர வட்டச் செயலாளர்கள் பலரும் எழுந்து, ‘புதிய பொறுப்பாளரை ஏற்க முடியாது’ என்று கூறி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்நிலையில், ‘ராஜேஷை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகள் யாருக்கேனும் ஒருவருக்கு பதவி வழங்க வேண்டும். இல்லையென்றால், தொடர்ந்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வோம்’ என்று வட்டச் செயலாளர்கள் சூளுரைத்திருப்பதோடு, ராஜேஷூக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில், இன்று மாலை மாநகர பொறுப்பாளரை மாற்றக் கோரி, தி.மு.க தலைமை அலுவலகத்தை 100 -க்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகள் முற்றுகையிடப் போகிறார்களாம்.