சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் நாசர் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது, “ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவது என்பது சவாலானது. முதலில் பேசுபவர்கள் என்ன பேசப்போகிறார்கள் என்று நாம் நிதானமாக யோசிப்பதற்குள் மேடைக்கு அழைக்கப்படுவோம். கடைசியாகப் பேசுபவர்களுக்கோ, சொல்ல வந்த கருத்துக்கள் அனைத்தையும் முன்னால் பேசியவர்களே சொல்லிவிடுவார்களோ என்ற பதற்றம் இருக்கும். இந்தச் சூழலில், ஒரு கட்சி சாராத பொதுவான மனிதனாக, மக்களின் பிரதிநிதியாக எனது கருத்துக்களை இங்கே முன்வைக்க விரும்புகிறேன்.
நாம் இன்னும் சில வாரங்களில் ஒரு முக்கியமான சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நமது கல்வி, வரி, பொருளாதார முன்னேற்றம் என அனைத்தையும் தீர்மானிக்கப்போகும் ஓர் அரசை நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு சாதாரணச் சட்டையை அல்லது புடவையை வாங்கச் சென்றால் கூட, அது சாயம் போகுமா, ஒரிஜினல் பட்டுதானா என்று நூறு கேள்விகளைக் கேட்கிறோம். ஆனால், ஏழு கோடி தமிழர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அரசைத் தேர்ந்தெடுக்கும்போது மட்டும், நாம் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கிறோம். சிந்தித்து கேள்விகள் கேட்பதில்லை.
இன்றைய சூழலில் ‘பிரபலம்’ என்பது மட்டுமே ஒரு கட்சி தொடங்குவதற்குப் போதுமான தகுதியாகக் கருதப்படுகிறது. திட்டங்களைப் பட்டியலிடுவது மட்டுமே அரசியல் ஆகாது. “வீடு கட்டித் தருவேன்” என்று எல்லா கட்சிகளும் சொல்லும். அது ஒரு திட்டமே தவிரக் கொள்கையல்ல. எந்தக் கொள்கையின் அடிப்படையில் நீங்கள் ஒரு நாட்டை வழிநடத்தப் போகிறீர்கள் என்பதே முக்கியம்.
திராவிட இயக்கத்திற்கு 75 ஆண்டுகாலப் பாரம்பரியம் இருக்கிறது. அதற்குப் பின்னால் எண்ணற்ற தியாகங்கள், வீரச் செயல்கள் மற்றும் வரலாற்றுச் சுவடுகள் புத்தகங்களாகப் பதிவாகியுள்ளன. வெறுமனே படங்களைப் பட்டியலிட்டு “நான் ஆட்சி செய்வேன்” என்று கூறுவது தற்போதைய தேவை அல்ல. நமக்குத் தேவை கல்வியிலும், பொருளாதாரத்திலும் நம்மை முன்னேற்றக்கூடிய ஒரு கொள்கை.

நமக்குள்ளே நிறத்தின் அடிப்படையிலோ, சாதி, மத அல்லது செய்யும் தொழிலின் அடிப்படையிலோ வேறுபாடுகள் தேவையில்லை. ஒரு நடிகர் தனது நடிப்பிற்காகப் பாராட்டப்பட வேண்டும், ஒரு வியாபாரி தனது பொருளின் தரத்திற்காக மதிக்கப்பட வேண்டும். ஆனால், அரசு என்று வரும்போது மதம், ஜாதி கடந்து எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் கொள்கை வேண்டும். கல்வி, பொருளாதாரம், சுயமரியாதை – இந்த மூன்றும் தான் ஒரு சமூகத்தின் கண்கள். இவை எங்கே கிடைக்கின்றன என்று தேடிப் பார்த்தால், அவை ஒரு புள்ளியில் வந்து குவிகின்றன.
கடற்கரையில் அமர்ந்து பார்த்தால் விதவிதமான அலைகள் வரும். சில அலைகள் சுகமாக இருக்கும், சில நம்மை இழுத்துச் செல்ல முயலும். அரசியல் சூழலிலும் இன்று பல புதிய அலைகள் வீசுகின்றன. ஆனால், அந்த அலைகளையெல்லாம் தாங்கி நிற்கின்ற ஒரு பெரும் பாறையாக நான் தற்போதைய முதலமைச்சரைப் பார்க்கிறேன். விமர்சனங்கள் காந்தி முதல் கடவுள் வரை அனைவருக்கும் உண்டு; ஆனால் ஒரு தீர்வைத் தேடும்போது நிதர்சனம் எது என்பதை நாம் உணர வேண்டும்.
நமது வாழ்க்கையை நாமே தீர்மானிக்க வேண்டிய தருணம் இது. உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்தால், தமிழகத்தின் விடியல் ‘உதயத்தில்’ தான் இருக்கிறது என்பது புரியும். சமூகத்திற்காக 100 வயது வரை வாழ்ந்த ஐயா நல்லகண்ணு போன்றவர்களின் வாழ்வு கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. கலைவாணர் காட்டிய வழியில் நகைச்சுவையோடு நற்பண்புகளையும், கருத்துக்களையும் விதைக்கும் கலைஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.
நம்பிக்கையோடு கூடிய இந்த முகங்களைப் பார்க்கும்போது, தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகால எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருப்பதை நான் நிதர்சனமாக உணர்கிறேன்.” எனக் குறிப்பிட்டார்.




