அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. எதிர்பார்த்ததைப் போலவே அதிமுக பா.ஜ.க கூட்டணி உறுதியாகியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
எடப்பாடி பதில்!
இதற்கு பதிலளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், “தி.மு.க. தலைவரும், விடியா திமுக அரசின் முதல்வருமான ஸ்டாலின், தினமும் என்ன பிரச்னை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை தி.மு.க பொதுக்குழுவில் சொன்னார்.
நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது. இன்றோ, அ.இ.அ.தி.மு.க-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும்!
பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது பதிவுகளில் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டு நலனுக்கான `குறைந்தபட்ச செயல் திட்டம்’ இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அறிவித்திருந்தார். `என்னவா இருக்கும்?’ என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார்.

NEET என்றால் என்ன?
மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? “NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி?”- இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள். ஸ்டாலின் அவர்களே நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது!
அதிமுக ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது! மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும்! காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்!

தமிழ்நாடு விரோத தி.மு.க. வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்!
(பி.கு : ரெய்டுகளுக்கு பயந்து, “தொட்டுப் பார்- சீண்டிப் பார்” வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்!)” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
