தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன.
இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது. பெரிய கட்சிகளில் மீதமிருந்தது மக்கள் நீதி மய்யமும், தேமுதிகவும் மட்டுமே.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக – தேசிய முற்போக்கு திராவிட கழகம் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. தேமுதிக இரட்டை இலக்க தொகுதிகள் கேட்டு வந்த நிலையில், 10 தொகுதிகளை திமுக ஒதுக்கி இருக்கிறது.
அதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,
“தேமுதிக-வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் களப்பணியைத் தொடங்குவோம். திமுக கூட்டணியில் ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டது. எல்லா புகழும் கேப்டனுக்கே…

இரண்டு நாள்களில் தொகுதி விவரம் உறுதியாகும். தொண்டர்கள் விரும்பிய கூட்டணிதான் இது. நாளை, நாளை மறுநாள் எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதிசெய்யப்பட்டு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறோம். நாங்களும் அதிக இடங்களை கேட்டோம். கூட்டணிக்காக விட்டுக்கொடுத்திருக்கிறோம். தேமுதிக சார்பில் ஏப்ரல் 1-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும். இந்தக் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்” என்று கூறியிருக்கிறார்.




