அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரி அறிவித்து, கிட்டதட்ட 10 நாள்களுக்கு பிறகு, இந்திய அரசு அமெரிக்கா உடனான வர்த்தகம் குறித்து வாயை திறந்துள்ளது.
இந்தியாவிற்கு எவ்வளவு வரி?
கடந்த 2-ம் தேதி ட்ரம்ப் இந்தியாவிற்கு 27 சதவிகித வரி மற்றும் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிற நாடுகளுக்களின் பொருள்களுக்கான 10 சதவிகித வரி என இந்தியா மீது 37 சதவிகித வரி விதித்தது.
10 சதவிகித வரி கடந்த ஏப்ரல் 5-ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது. ஏப்ரல் 9-ம் தேதி அமலுக்கு வரும் என்று சொல்லப்பட்ட பரஸ்பர வரியை சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு அடுத்த 90 நாள்களுக்கு பிறகு அமல் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஒத்திவைப்பு
இந்த வரி விதிப்பினால் அமெரிக்கா உள்பட அனைத்து உலக நாடுகளுமே பொருளாதாரத்தில் பலத்த அடியைச் சந்தித்தது.
இந்த நிலையில், ட்ரம்ப் பேச்சுவார்த்தைக்கு தயார் என உலக நாடுகளிடம் சமாதான கொடியை காட்டியுள்ளார். அதற்கான முன்னெடுப்பு தான் ‘இந்த 90 நாள்கள் ஒத்திவைப்பு’ என்று எடுத்துக்கொள்ளலாம்.
இந்த பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பிற்கு பிறகு, முதன்முதலாக, அமெரிக்கா உடனான வர்த்தகம் குறித்து மத்திய அரசு பேசியுள்ளது.

மத்திய அமைச்சரின் விளக்கம்
மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் இந்திய – அமெரிக்க வர்த்தகத்தை எளிதாக்கும் விதமாக ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட கடந்த பிப்ரவரி மாதம் முடிவு செய்துள்ளனர்.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே கிட்டதட்ட 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகம் நடக்க உள்ளது. இது முன்னர் நடந்த வர்த்தகத்தை விட 2.5 மடங்கு அதிகம் ஆகும்.
இது வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்தும். இந்திய ஏற்கெனவே இந்த ரேசில் முன்னணியில் உள்ளது. இந்த முடிவு மேலும் நல்ல முன்னேற்றத்தை கொண்டுவரும்” என்று கூறியுள்ளார்.
எவ்வளவுக்கு எவ்வளவு இந்த ஒப்பந்தத்தை வேகப்படுத்துகிறதோ இந்தியா, இந்த அதிக வரி விதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
இந்த ஒப்பந்தத்திற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை இந்த மாதம் தொடங்க உள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
