சமீபத்தில் தவெக-வின் மூன்றாமாண்டு தொடக்க விழா மேடையில் பாடகர் வேல்முருகன் விஜய்யைப் புகழ்ந்து பாடியது நினைவிருக்கலாம்.
அவர் பாடிய பாடல் வரிகளில் திமுக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் ‘கொள்ளையடித்தக் கூட்டம்’ என்றெல்லாம் வார்த்தைகள் இருந்தன.
இது தொடர்பாக நாம் வேல்முருகனிடம் அப்போதே கேட்டதற்கு,
“நான் எல்லோருக்கும் பொதுவான ஆளுங்க. பிரதமர் மோடி ஒரு மேடையில் என்னைக் கட்டிப் பிடித்தார். உதயநிதிக்கு கூட ‘வேணாம் மச்சான்’ பாட்டு பாடியிருக்கேன். மூணாவது வருஷ தொடக்க விழான்னு கச்சேரிக்குக் கூப்பிட்டாங்க. என்னை நம்பி என்கூட இருக்கிறவங்களுக்கு பாட ஒரு மேடையும் நாலு காசும் கிடைக்கும்கிறதால போய் பாடினேன். வந்திருந்தவங்க நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க. இதைத் தாண்டி வேற எதையும் நான் காதுல ஏத்திக்கப் போறதில்லை” எனச் சொல்லியிருந்தார்.
இந்த நிலையில் சில தினங்களூக்கு முன் தமிழ்நாடு அரசின் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பாடகர் வேல்முருகனுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. விருதை வழங்கியது துணை முதல்வர் உதயநிதி.
விழாவில் வேல்முருகனின் பெயர் வாசிக்கப்பட்டு, அவர் மேடையருகே சென்றதும், அவரைப் பார்த்த அமைச்சர் சேகர் பாபு, ‘பாடகரே சமீபத்திய உங்க ஆடலும் பாடலும் பார்த்தோம். நல்லா இருந்தது. இருந்தாலும் எங்களுக்கு உங்க மேல வருத்தம்’ என்றாராம்.
இது குறித்து வேல்முருகனையே தொடர்பு கொண்டு கேட்டோம்.
”தேர்தல் நேரம் வந்திடுச்சுன்னாலே எங்களைப் போன்ற பாடகர்களுக்கு இது ஒரு பெரிய சங்கடம். எல்லாக் கட்சியும் கச்சேரிகளுக்குக் கூப்பிடுவாங்க. கலைஞர்களா யார்கிட்டயும் மறுப்புச் சொல்ல முடியாது. போய் பாடுகிற இடங்கள்ல சமயங்கள்ல ஏதாவது கூட்டிக் குறைச்சுப் பாட வேண்டி வந்திடுது. அது நாங்க விருப்பப் பட்டு பண்றதில்லை. உடனே ‘காசு கொடுத்தா எப்படி வேணும்னாலும் பாடுவீங்களா’னு கேப்பீங்க. கோயில் கொடைக்குப் போறோம். திருவிழா முடிஞ்ச கடைசி நாள் ரெண்டு சினிமா பாட்டு பாடுங்கனு சொன்னா பாடுவாங்க இல்லையா, அது போலத்தான் எங்களை விரும்பி அழைக்கிறவங்க வேண்டுகோள் வைக்கிறப்ப கொஞ்சம் முன்னப் பின்ன நடந்துக்க வேண்டியிருக்கு.

அதனால ஒரு மேடையில பாடறதை வச்சு எங்களை முத்திரை குத்த வேண்டாம்னு கேட்டுக்க விரும்பறேன்.
தவெக மேடையில நான் பாடிய அடுத்த நாளே அது தொடர்பான என்னுடைய விளக்கத்தையும் தந்துட்டேன், அந்தப் பிரச்னை அன்னைக்கே முடிஞ்சது.
சமூக ஊடகங்களில்தான் சிலர் எப்பவும் ஏதாவது சர்ச்சை கிடைக்காதானு தேடிட்டிருக்காங்க. அவங்கதான் சின்ன பிரச்னையா இருந்தாலும் பெரிசு படுத்திடுறாங்க.
சினிமா விழாவுல விருது வாங்கறதுக்கு முன்னாடி அமைச்சர் எங்கிட்ட அப்படிச் சொன்னது நிஜம்தான். அவர் அப்படிப் பேசினதும் எனக்கே கொஞ்சம் சங்கடமாத்தான் போச்சு. என்ன சொல்றதுனு யோசிட்டிருந்தப்பவே துணை முதல்வர் அவர் பங்குக்கு ‘எங்க வருமானம் வருதோ அங்க போக வேண்டிதானே’னு சொல்லிட்டார். ஒரு மாதிரி ஆகிடுச்சு. உடனே துணை முதல்வர் சிரிச்சுகிட்டே, ‘நீங்க எல்லாருக்கும் பொதுவானவர்னு எனக்குத் தெரியும்’ எனச் சொல்லி, அந்தச் சூழலை எளிதாக்கினார்.
அவர்கிட்ட ஏற்கெனவே அறிமுகமானவங்கிற முறையில அவர் அதை சீரியஸா எடுத்துக்கிடலைன்னுதான் தெரிஞ்சது. இருந்தாலும் அந்த நேரத்துல அது கொஞ்சம் சங்கடமாத்தான் இருந்தது” என்கிறார்.




