திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இன்றுக்குள் இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை அல்லது நாளை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் கொங்கு மண்டலத்தில் தோல்வியடைந்த திமுக இந்த முறை பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
செந்தில் பாலாஜி மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் போட்டியிட்டார். 2026 தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வந்தது.
ஆனால் இதை செந்தில் பாலாஜியே அப்போது மறுத்திருந்தார். “கரூர் மக்கள் என் இதயத்தில் உள்ளனர். அதனால் அங்கிருந்து மாற மாட்டேன்” என கூறினார். தேர்தலுக்கான கோவை திமுக வேட்பாளர் பட்டியல் மிகவும் சர்ப்ரைஸாக உள்ளது. கோவை தெற்கு தொகுதியை குறிவைத்து ராஜீவ் காந்தி, டாக்டர் மகேந்திரன், மீனா ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் பணியாற்றி வருகிறார்கள்.

செந்தில் பாலாஜியும் கரூரில் பட்டி பார்முலாவை கையில் எடுத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக மீண்டும் தகவல் பரவி வருகிறது.
இந்தமுறை அறிவாலயம் முதல் கோவையின் சந்து பொந்து வரை ஆழமாக பரவுகிறது. எஸ்.பி வேலுமணி, அண்ணாமலை போன்ற முக்கிய நிர்வாகிகள் கோவையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களுக்கு எதிராக திமுக சார்பில் வலுவான முகம் இறங்க வேண்டும் என்பதால், செந்தில் பாலாஜியை கோவையில் போட்டியிட திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். கரூரிலும் இந்தமுறை அவருக்கு எதிர்ப்புகள் இருப்பதால் செந்தில் பாலாஜியும் கோவையில் போட்டியிட முடிவு செய்துவிட்டாராம்.
அதை உறுதி செய்யும் வகையில் கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட திமுக வார்டு செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு செந்தில் பாலாஜி நேரடியாக மெசேஜ் அனுப்பியுள்ளார். தன்னுடைய செல்போன் எண்ணை கொடுத்து, “பதிவு செய்து கொள்ளுங்கள்” எதுவாக இருந்தாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அங்கு ஏற்கெனவே அறிமுகம் உள்ள நிர்வாகிகளிடம் தொகுதி நிலவரம் குறித்தும் கேட்டு வருகிறாராம். கோவையின் இதய பகுதியில் உள்ள இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சியும் கேட்டது. ஆனால் திமுக விட்டுத்தர மறுத்துவிட்டது.
சிறுபான்மை மக்கள் கணிசமாகவும், இதர சமுதாய மக்கள் சம விகிதத்தில் இருப்பதாலும் அங்கு எளிதில் வெற்றி பெறலாம் என்று செந்தில் பாலாஜி நினைக்கிறாராம். இந்த தகவலால் உள்ளூர் உடன்பிறப்புகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நம்மிடம் பேசிய கோவை திமுக நிர்வாகிகள், “ஆரம்பத்தில் செந்தில் பாலாஜி, ‘தேர்தல் வரை தான் கோவையில் இருப்பேன்.

அதன் பிறகு இங்கிருந்து வெற்றி பெற்று 2 அமைச்சர்கள் கிடைத்துவிடுவார்கள். நான் கரூர் சென்றுவிடுவேன்’ என்று கூறி வந்தார். தற்போது அவர் கோவையில் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல் மூலம் இங்குள்ள நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ சீட், அமைச்சர் வாய்ப்பு பறிபோகும்.
மேலும் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுவது கோவை, கரூர் 2 மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ‘நீங்கள் வாக்களித்த செந்தில் பாலாஜி கோவை சென்றுவிட்டார்’ என்று கரூரிலும், ‘தேர்தலுக்காக வெளியூரில் இருந்து கோவை வந்துள்ளார்.

தேர்தல் முடிந்ததும் சென்றுவிடுவார்’ என்கிற பிரசாரத்தை கோவையிலும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும். அதனால் 2 மாவட்டங்களிலும் சிக்கல் ஏற்படும். எனவே அந்தந்த பகுதிகளில் இருப்போருக்கு வாய்ப்பளிப்பதுதான் கட்சிக்கு பயனளிக்கும்” என்கிறார்கள்




