“சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம். இதுதான் எங்கள் நிலைமை. திமுக எங்களுடைய தரத்திற்கு தகுந்த மாதிரி எண்ணிக்கை கொடுக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது.
அதேபோல நான்கு தொகுதிகளிலும் எங்கள் சின்னத்தில் போட்டியிட முடியவில்லை என்ற வருத்தமும் இருக்கிறது” என்று மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் நேற்று (மார்ச்.27) அண்ணா அறிவாலயத்தில் மதிமுக-வுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பின் குமுறினார்.
இது அர்ஜுனராஜின் குமுறல் மட்டும் அல்ல பெரும்பாலான மதிமுக நிர்வாகிகளின் கதறல் சத்தமும் கூட..!
கதறும் மதிமுக நிர்வாகிகள்
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிக-வுக்கு 10 என தாராளம் காட்டப்பட்ட நிலையில், ம.தி.மு.க-வுக்குக் கிடைத்தது வெறும் 4 இடங்கள் மட்டுமே. இதில் உச்சக்கட்ட வேதனை என்னவென்றால், அந்த நான்கில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்கிற ‘கட்டாய’ நிபந்தனைத் தான்.
எஸ்டிபிஐ போன்ற சிறிய கட்சிகளின் வரிசையில் வைத்து ம.தி.மு.க-வும் கையாளப்படுவது அக்கட்சியின் நிர்வாகிகளைச் செரிக்க முடியாத துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
திமுக-வுடனான கூட்டணியில் உடன்பாடில்லை!
“கூட்டணி தர்மத்துக்காகக் குனிந்து கொடுக்கிறோம்… ஆனால் அதுவே எங்களை மண்டியிடச் செய்துவிடுமோ?” என்ற அச்சம் வைகோவின் பாசறையில் இப்போது பலமாகவே எதிரொலிக்கிறது.
இந்நிலையில் மதிமுக நிர்வாகிகளின் மனநிலை உண்மையிலேயே என்னவாக இருக்கிறது என்பது பற்றி தெரிந்துகொள்ள நிர்வாகிகள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
“திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதில் பெரும்பான்மையான நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உடன்பாடில்லை.

மதிமுகவை அழிக்க நினைக்கும் ஸ்டாலின்
மதிமுகவை அழிக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது என்பதுதான் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்து.
குறைவானத் தொகுதி எண்ணிக்கை, அவர்கள் சின்னத்திலேயே போட்டியிட சொல்வது எல்லாம் நியாயமான விஷயம் அல்ல. 99.9 சதவிகித நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லாத கூட்டணிதான் இது.
தமிழக மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் வைகோ
ஐ. நா சபையில் இந்தியாவின் பிரதிநிதியாக பேசிய தலைவர் பல உலக நாடுகளின் பாராளுமன்றம் உள்ளிட்ட உயர் சபைகளில் பேசி இந்தியாவிற்கே பெருமை சேர்ந்த தலைவர் வைகோ.
தமிழ் நாட்டில் நெய்வேலியை தனியாருக்கு தாரை வார்ப்பதை உரிமைக்காக தடுத்து நிறுத்தியது உள்ளிட்ட தமிழக மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர். தேசிய தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுடன் நிலவரையில் தங்கி பலநாட்கள் அவருடன் இருந்தவர் எங்கள் தலைவர் வைகோ.
நடுச்சந்தியில் நிறுத்திவிட்ட ஸ்டாலின்
தேசிய தலைவரின் தாயார் திருமதி.பார்வதியம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழ் நாட்டிற்கு வந்த பொழுது விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய தி.மு.க அரசை கண்டித்து பெரும் போராட்டம் நடத்தினார்.
கலைஞரால் வீழ்த்த முடியாத தலைவரை வீழ்த்தி நடுச்சந்தியில் நிறுத்திவிட்டார் மு.க.ஸ்டாலின்” என்று தனது வருத்தத்தை பதிவு செய்தார்கள்.




