மார்ச் ஒன்றாம் தேதியான நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் நேற்று முதல் பிறந்த குழந்தைகளுக்கு தி.மு.க சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்றைய தினம் பிறந்த 16 குழந்தைகளுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில், வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் தங்க மோதிரங்களை குழந்தைகளுக்கு இன்று வழங்கினர்.
இதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “சீமான் வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கு. ஏற்கெனவே, இதில் புகார்தாரராக உள்ள பெண்மணி, சீமான் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். அதில், தி.மு.க பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் இதில் தலையிடவில்லை. உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் வழக்கு பதிவு செய்து, இந்த வழக்குகள் நடந்து வருகிறது. அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் தி.மு.க-விற்கு எந்த பின்புலமும் கிடையாது என்று. சீமானை சமாளிக்கிறது எல்லாம் எங்களுக்கு தூசு மாதிரி.
அவர் ஒரு பிரச்னையே கிடையாது. நாங்கள் இதில் தலையிட்டு இருந்தால் வழக்கை எப்படியெல்லாம் திசை திருப்பி இருக்கலாம். ஆனால், நாங்கள் இதில் தலையிடவில்லை. சீமான் தான் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கில் நீதிமன்றம், ‘இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமை இது’ என்று கூறியது. நீதிமன்றம் தந்த இந்த அழுத்தத்தில்தான் இந்த வழக்கு நடைபெறுகிறதே தவிர, தி.மு.க தலையிட்டதாலோ அல்லது நாங்கள் சீமானை கண்டு பயந்ததாலோ இந்த வழக்கு நடைபெறவில்லை. சீமான் மீது 72-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எல்லா வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. நிச்சயமாக அப்படியே நடக்கும். இரண்டு தினங்களுக்கு முன்னால் நடந்த விழாவில் சிறப்பாக, தெளிவாக தனது நிலைப்பாட்டை திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். அது, ஒன்று போதும். இந்த கூட்டணி தான் தொடரும். இந்த இந்தியா கூட்டணியால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும். இந்த கூட்டணி முன்னெடுக்கின்ற கொள்கைதான் இந்தியாவுக்கு வழிகாட்டுகின்ற கொள்கையாக அமையும் என்றெல்லாம் வலியுறுத்தி கூறி, முதலமைச்சர் தலைமையில் இயங்குகின்ற இந்த கூட்டணிக்கு முழு ஆதரவையும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதனால், அது பற்றி எந்த பிரச்னையும் கிடையாது.

அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டியதற்கான காரணம் தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது.. ஒரு இடம் கூட குறையக் கூடாது. அதே நிலையில் வட மாநிலத்தில் ஒரு இடம்கூட கூட்டக் கூடாது. தென் இந்திய நலனுக்காக நடத்தப்படுகின்ற அனைத்து கட்சி கூட்டம் இது. தென்னிந்திய நலனில் அக்கறை இல்லாத கட்சிகள் கலந்து கொள்ளவில்லை என்றால் எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை” என்றார்.