தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு முன்பாக சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீ்மான் திடீரென தேர்தலை தள்ளிப்போடச் சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அதுகுறித்து விசாரித்தோம்.
2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளுக்காக சென்னை வந்திருக்கிறார்கள் அகில இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை அதிகாரிகள். கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தனியார் விடுதியில் தேர்தலை சிறப்பாக நடத்தி முடிப்பது குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது தேர்தல் ஆணையம். தி.மு.க தரப்பில் பங்கேற்ற ஆர்.எஸ் பாரதி, “தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தலை ஓரே கட்டமாக ஏப்ரல் மாதத்துக்குள் நடத்திமுடிக்க வேண்டும்” என கோரினார்.
வி.சி.க தரப்பில் பேசிய ரவிக்குமார், “பிரசாரத்துக்கு 15 நாட்கள் மட்டுமே அனுமதியளிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். இறுதியாக பேசிய சீமான், “தேர்தல் நடைபெற்ற நாளிலிருந்து ஓரிரு மாதங்கள் வாக்குப் பெட்டியை பூட்டி பாதுகாக்கிறோம் என்கிறார்கள். அதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆகையால் தேர்தல் முடிந்தவுடன் ஓரிரு நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்தும் வகையில் கடைசி கட்டமாக தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடத்துங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.

நா.த.க-வின் பிரசாரம் குறித்து அக்கட்சியினரிடம் பேசினோம், “ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்து, வாக்கு இயந்திரம் இருக்கும் அறையை பாதுகாப்பது பெரும் சவாலாக இருக்கிறது.
அது மட்டும் இன்றி, மாநாடுக்கு கூடிய கூட்டத்தை பார்த்த அண்ணன் சீமான், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாபெரும் பொதுக்கூட்டங்களை நடத்திவிட வேண்டும் என விரும்புகிறார். அதற்கு 40 நாட்கள் தேவைப்படுகிறது. அதையும் மனதில் வைத்தே கடைசி கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்கிறார்” என்றனர்.




