தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.
தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வீச, பதிலுக்கு ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கெல்லாம் தமிழ்நாட்டில் ஒத்து வராது’ என சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று இன்னொரு குண்டை வீசியிருந்தார்.
ஸ்டாலினின் கருத்துக்கு காங். எம்.பி மாணிக்கம் தாகூர் 2006 தேர்தலைக் சுட்டிக்காட்டி எதிர்வினை ஆற்றியிருந்தார்.
அதாவது “மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை… 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழக காங்கிரஸின் தவறு தான்” என்று பதிவிட்டிருந்தார்.
மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டிய 2006 தேர்தலில் நடந்தது என்ன?
2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
அதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் இடம்பெற்றன.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன.
தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன.

பெரும்பான்மையைப் பெறாத திமுக
இந்தத் தேர்தலின் முடிவில் திமுக 96 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 34 இடங்களிலும், பாமக 18 இடங்களிலும், சிபிஎம் 9 இடங்களிலும், சிபிஐ 6 இடங்களிலும், ஐயூஎம்எல் 1 தொகுதியிலும் என 164 தொகுதிகளை வென்றன.
அதேபோல் அதிமுக 61 இடங்களிலும், மதிமுக 6 இடங்களிலும், விசிக 2 இடங்கள் என 69 தொகுதிகளை வென்றன.
தேமுதிக சார்பில் விஜயகாந்த் ஒருவர் மட்டும் வென்றார். பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
ஒத்துழைப்புடன் திமுக ஆட்சி
பெரும்பான்மைக்கு 118 இடங்கள் வேண்டும் என்ற நிலையில், திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது.
கூட்டணிக்குப் பெரும்பான்மை இருந்தாலும், திமுகவுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் கூட்டணி ஆட்சி அமையும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ், பாமக ஒத்துழைப்புடன் தனியாகவே ஆட்சி அமைத்தது திமுக.

விமர்சித்த ஜெயலலிதா – சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர்
இந்த 2006- ல் அமைந்த திமுக ஆட்சியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா `மைனாரிட்டி அரசு’ என ஆட்சி முடியும் வரை விமர்சித்துக்கொண்டே இருந்தார்.
ஒருவேளை அன்று கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்டிருந்தால் திமுக என்ன செய்திருக்கும் என்பது கேள்விக்குறியே?
காரணம், அன்று மத்தியில் அமைந்திருந்த காங்கிரஸ் அரசில் திமுக இடம் பெற்றிருந்தது. அதனால் காங்கிரஸ் அமைதியாக இருந்துவிட்டது. 34 இடங்களை வென்ற காங்கிரஸ் அமைதியாக இருந்ததால், மற்ற கட்சிகளும் அந்த கோரிக்கையை எழுப்பாமல் அமைதியாக கடந்துவிட்டனர்.
இதைதான் 2006 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி ஏற்படுத்தாமல் விட்டது காங்கிரஸ் செய்த தவறு என மாணிக்கம் தாகூர் தற்போது சுட்டிக்காட்டியிருக்கிறார்.




