அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது நாங்கள் ஒரு ஏழைக்கட்சியென ஜாலியாக பேசி கலகலப்பூட்டினார்.
அவர் பேசியதாவது, ‘தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை திமுகவுடன் கூட்டணி வைக்கிறோம். தொகுதி பங்கீடு குழுவுடன் பேசியிருக்கிறோம். தகுதியான இடங்களை பெறுவோம். திமுக மீண்டும் வென்று ஆட்சி அமைக்கும்.
2021 வரை அதிமுக கூட்டணியில்தான் இருந்தோம். எடப்பாடி தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளையே சந்திக்கிறது. கொள்கைகளை வலிமையாக பற்றி நிற்கிற தனியரசு அங்கே இருக்க வாய்ப்பே இல்லை. தொடர் தோல்விகளுக்குப் பிறகும் எடப்பாடி எதையும் மாற்றவில்லை. NDA இந்தத் தேர்தலில் படுதோல்வி அடையும்.
2 தொகுதிகளை கேட்டிருக்கிறோம். வெற்றிக்கு வாய்ப்புள்ள தொகுதியை தலைவரிடம் பேசி கொடுப்பதாக குழுவினர் கூறுகின்றனர். ஒரு தொகுதி அதுவும் வெற்றி வாய்ப்புள்ள ஒரு தொகுதி எங்களுக்கு உறுதி.

2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தாலும், தேர்தலுக்கு முன்பே அந்த கூட்டணி தோற்கும் என கூறிய ஒரே ஆள் தனியரசுதான்.
நாங்கள் ஒரு ஏழைக்கட்சி’ என முடித்தவுடன், ‘சார் இத்தனை பேரோட சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்துறீங்க. நீங்க ஏழை கட்சியா?’ என ஒரு நிருபர் கேட்க, ‘ஆமாங்க, காலையில கூட நாங்கெல்லாம் 3 இட்லி மட்டும்தான் சாப்பிட்டோம். ஆம்லேட், வடை கூட சாப்பிடலை. நைட்டும் வெறும் புரோட்டா மட்டும்தான் சாப்பிடுவோம். உலகத்திலேயே ஆம்லெட்டும் வடையும் சாப்பிடாத ஒரே கட்சி நாங்கள் மட்டும்தான்’ எனக் கூறி வினோதமாக பெருமிதப்பட்டுக் கொண்டார்.




