27
February, 2026

A News 365Times Venture

27
Friday
February, 2026

A News 365Times Venture

`அழுகை; சிரிப்பு.!' சிபிஐ-யை லெஃப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்; விடுவிக்கப்பட்ட கெஜ்ரிவால்! முழுவிவரம்

Date:

இந்திய அரசியலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் புயலை கிளப்பிக் கொண்டிருந்த ‘டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்’ வழக்கில் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பம் ஏற்பட்டுள்ளது. டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, பிஆர்எஸ் தலைவி கே. கவிதா உள்ளிட்ட 23 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Aravind Kejriwal

வழக்கின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை!

2021-22 ஆம் ஆண்டு டெல்லி அரசு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகவும், இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் கிடைத்ததாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தன.

டெல்லி அரசு எந்த ஒரு கொள்கை முடிவை எடுத்தாலும் அதற்கு டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்படி ஆம் ஆத்மி கொண்டு வந்திருந்த மதுபான கொள்கைக்கும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருந்தார். ஆனால் அவர் இந்த விவகாரத்தில் எங்கும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது செய்யும் படலத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்தது.

இந்த வழக்கின் அடிப்படையில்:

பிப்ரவரி 2023: மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

மார்ச் 2024: டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அவரது இல்லத்திலேயே வைத்து கைது செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த சட்டப் போராட்டத்தில், கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது.

இதே விவகாரத்தில் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வரான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பஞ்சாப் உத்தர பிரதேசம் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டிருந்தனர்

கவிதா
கவிதா

நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும், சிபிஐ-க்கு கண்டனமும்

இந்த விவகாரத்தில் விசாரணையானது டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது ஏற்கனவே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்த நிலையில், குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ரோஸ் அவென்யூ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்:

ஆதாரமின்மை: “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு நேரடி பணப் பரிமாற்றமோ அல்லது சதித் திட்டமோ நிரூபிக்கப்படவில்லை. வெறும் யூகங்களின் அடிப்படையில் ஒருவரை குற்றவாளியாகக் கருத முடியாது.”

சிபிஐ-க்கு கண்டனம்: “விசாரணை அமைப்பான சிபிஐ, வழக்கில் உள்ள ஓட்டைகளை மறைக்க ‘அப்ரூவர்’ மட்டுமே நம்பியிருந்தது கவலையளிக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது” என்று நீதிபதி கடுமையாகச் சாடினார்.

விடுதலை: போதிய முகாந்திரம் இல்லாததால் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 23 பேரையும் நீதிமன்றம் ‘டிஸ்சார்ஜ்’ செய்து உத்தரவிட்டது.

நடவடிக்கை: இந்த விவகாரத்தில் சிபிஐயின் விசாரணை அதிகாரிக்கு எதிராக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

நீதிமன்றத்தில் கண்ணீர் விட்ட கெஜ்ரிவால்

தீர்ப்பு வாசிக்கப்பட்டவுடன், நீதிமன்ற அறையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ச்சிவசப்பட்டார். தனது வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்த்தவுடன் அவர் கண்கலங்கி அழுதார். இரண்டு ஆண்டுகால சிறைவாசம், அரசியல் பழிவாங்கல் மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட ‘ஊழல்வாதி’ என்ற முத்திரை அகன்ற நிம்மதியில் அவர் சில நிமிடங்கள் மௌனமாக கண்ணீர் வடித்தார். இக்காட்சி அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாகவும் உருக்கமாகவும் பேசினார். “இரண்டு ஆண்டுகளாக என்னையும் எனது குடும்பத்தையும் சிதைக்கப் பார்த்தார்கள். நான் ஒரு ஊழல்வாதி என்று நாட்டு மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். இன்று நீதிமன்றம் உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது. எனது நேர்மைக்குக் கிடைத்த வெற்றி இது. சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டன, உண்மை வெளிவந்தது. இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்திற்கான வெற்றி” என உணர்ச்சி பெருக்குடன் பேசினார்

தொடர்ந்து பேச முடியாமல் அவர் வெடித்து அழுதார், “பழிவாங்கும் அரசியலுக்குப் பலியாகி நான் சிறையில் இருந்தபோது, டெல்லி மக்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையே என்னை இன்று விடுவித்துள்ளது,” என்றார்.

கெஜ்ரிவால் மனைவி சுனிதா

சுனிதா கெஜ்ரிவாலின் உருக்கமான பதிவு

அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், “சத்தியமே வெல்லும் (Satyamev Jayate). இந்த உலகில் எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், சிவ சக்திக்கு மேல் யாரும் கிடையாது,” என்று பதிவிட்டுத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஆம் ஆத்மி கட்சியின் கொண்டாட்டங்கள்

தீர்ப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் வீதிகளில் இறங்கிக் கொண்டாடத் தொடங்கினர்.டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க நடனமாடினர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, “நமது சிங்கம் மீண்டும் வந்துவிட்டது” என்ற முழக்கங்கள் கேட்க ஆரம்பித்தது. நாடு முழுவதும் உள்ள அக்கட்சியின் கிளைகளில் இனிப்புகள் வழங்கப்பட்டு வெற்றிக் கொண்டாட்டங்கள் களைகட்டின.

அரசியல் முக்கியத்துவம்

இந்தத் தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு மிகப்பெரிய புத்துயிரைத் தந்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டது கெஜ்ரிவாலுக்கு ஒரு மிகப்பெரிய சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. பாஜக மற்றும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் மீதான ‘ஊழல்’ கறை நீக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். “உண்மை ஒருபோதும் தோற்காது” என்ற வாசகத்துடன் ஆம் ஆத்மி கட்சி தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளது.!

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'அறிவாலயத்துல கால் வச்ச உடனே பொள பொளன்னு கண்ணீர்..!' – தவிக்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்!

அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பி `தர்மயுத்தத்தை' முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் ஓ.பி.எஸ்....

"பாஜக-விற்கு இது தார்மீக மரண தண்டனை"- அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை குறித்து அகிலேஷ் யாதவ்

மதுபான கொள்கை வழக்கில் இருந்து டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...