நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எரிவாயு தட்டுப்பாடு முதல் ஈரான் – அமெரிக்க, இஸ்ரேல் போர் வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, படிக்கட்டுகளில் அமர்ந்து தேநீர், பிஸ்கட் சாப்பிட்டார்.
ராகுல் காந்தியின் இந்த செயலை கண்டித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐபி.எஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள், தூதர்கள், வழக்கறிஞர்கள் என, 204 பேர் திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், “ராகுல் காந்தியைப் பார்க்கும் போது எங்களுக்கு (பெண்களுக்கு) மிகவும் அசௌகரியமாக இருக்கிறது. அவர் ஒரு ‘தபோரி’ (நாடோடி| பொறுப்பற்றவர்) போல நடந்துகொள்கிறார்.
யாரைப் பார்த்தாலும் மரியாதையின்றி ஒருமையில் பேசுகிறார். யாராவது பேட்டி அளித்துக் கொண்டிருந்தால், அவர்களைக் கேலி செய்யும் வகையில் சத்தமிடுகிறார். ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியின் கண்ணியமான நடத்தையைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். ராகுல் காந்தி ஒரு அவமானம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், ராகுல் காந்திக்கு எதிராக முன்னாள் அதிகாரிகள் திரண்டு கடிதம் எழுதியிருப்பதும், கங்கனா ரனாவத் அவரை ஒருமையில் விமர்சித்திருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




