சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திரசேகர் என இரண்டு பேருமே அந்தத் தொகுதியை குறிவைத்து பணியாற்றி வருகிறார்கள்.
அங்கு தங்களுக்கு சீட்டை உறுதி செய்வதற்கு 2 பேரும் செய்து வரும் அதிரடி மூவ்கள், அவர்களுக்கு சீட் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக 2 கட்சிகளில் எழுந்துள்ள கலகக் குரல் ஆகியவற்றால் வடக்கு தொகுதி அதிரி புதிரி ஆகிக் கொண்டிருக்கிறது.
கோவை அதிமுகவினரிடம் பேசினோம், `சந்திரசேகர் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலேயே வடக்கு தொகுதியில் தனக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அப்போது எங்கள் கூட்டணியில் பாஜக வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு தொகுதி உறுதி செய்யப்பட்டது.
அதனால் அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக அம்மன் அர்ஜுனன், வடக்கு தொகுதிக்கு மாற்றப்பட்டார். சந்திரசேகருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் சந்திரசேகர் அதிருப்தியானார். கடந்த 2025 ஏப்ரல் மாதம் கட்சியை விட்டு விலகிய அவர், மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் கட்சியில் சேர்ந்தார்.
இந்தமுறை எப்படியாவது சீட்டை உறுதி செய்ய களத்தில் வேகம் காட்டுகிறார். கட்சிக்காரர்களுக்கு கறி விருந்து கொடுப்பது, தொகுதிக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று ஆக்டிவாக உள்ளார். ஆனால் ஏராளமான புகார்கள் எழுந்ததால் வேலுமணிக்கு அவர் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது. எனவே அவருக்கு வாய்ப்பு மிகவும் குறைவு.

தனது பண பலத்தையும், பாஜகவில் வானதிக்கு இங்கு சீட் கிடைத்துவிடக் கூடாது என்று லாபி செய்யும் நிர்வாகிகளை வைத்துக் கொண்டு லாபி செய்து வருகிறார். பிரசார வாகனத்தை கூட புக் செய்துவிட்டார். தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் கடந்த காலங்களில் கட்சி பணி செய்யாதவருக்கு, கட்சி எப்படி வாய்ப்பு வழங்க முடியும்” என்றனர்.
கோவை பாஜகவினரிடம் பேசியபோது, “கோவை தெற்கு தொகுதி சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், இந்தமுறை வடக்கு தொகுதியில் போட்டியிடும் முடிவில் உள்ளார். கடந்த சில மாதங்களாகவே அவர் வடக்கு தொகுதியில் தான் அதிகம் வலம் வருகிறார். கடந்த தீபாவளி பண்டிகையின்போது அங்குள்ள சக்தி கேந்திர நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கினார்.

அவருக்கு நெருக்கமானவர்கள் தான் தொகுதி பொறுப்பாளர்களாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணியிடம் பேசி வடக்கு தொகுதியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார். ஆனால் இந்தத் தொகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் எதிர்ப்பாக உள்ளனர்.
வடக்கு தொகுதியை குறிவைத்து பலர் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார்கள். வானதி சீனிவாசன் 10 ஆண்டுகளுக்கு மேலாக தெற்கு தொகுதியில் பணியாற்றிவிட்டு, தற்போது அங்கு வெற்றி வாய்ப்பு குறைகிறது என்பதற்காக வடக்கு தொகுதிக்கு மாறுவதை ஏற்க முடியாது. இன்றைய தினம் கூட நயினார் நாகேந்திரனை வடக்கு தொகுதிக்கு அழைத்து வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

கோவை மாவட்டத்தின் இதய பகுதியே தெற்கு தொகுதி தான். கோவையில் பாஜக வலுவாக இருக்க அந்தத் தொகுதி முக்கியம். கட்சி நலனை யோசிக்காமல், நிர்வாகிகளின் வசதிக்காக தொகுதி மாறுவதை கட்சி மேலிடம் அனுமதிக்க கூடாது” என்றனர்.
ஆக இருவரில் யாருக்கு சீட் வழங்கினாலும் உள்கட்சி பூசல் வெடித்து தேர்தலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தற்போதைய கள நிலவரம் உணர்த்துகிறது. அதனை சரிகட்டும் பொறுப்பும் தற்போது கட்சி தலைமைகளுக்கு ஏற்பட்டுள்ளது.




