தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதிகளையும் தி.மு.க தலைமை இறுதி செய்துள்ளது. விரைவில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று மாலை அறிவாலயத்திற்கு வருகை தந்து, தி.மு.கவின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதே போல் தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு இடங்களை ஒதுக்கியுள்ளது தி.மு.க.
இந்நிலையில் தி.மு.க வின் வேட்பளார்கள் பட்டியலை விரைவில் வெளியிட தி.மு.க திட்டமிட்டுள்ளது. இதனால், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்துவருகிறது தி.மு.க தலைமை.
இதுகுறித்து அறிவாலயத்திற்கு நெருக்கமானவர்களிடம் பேசும் போது “தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு நாகப்பட்டினம், மணப்பாறை தொகுதிகளை ஒதுக்க முடிவாகியுள்ளது. ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கபட்ட நான்கு தொகுதிகளில் மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லுார், சீர்காழி ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சீர்காழி தொகுதியில் தனி சின்னத்தில் ம.தி.மு.க நிற்க உள்ளதாக தெரிகிறது.
இவர்களை தவிற தி.மு.கவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ள தமீம் அன்சாரிக்கு சிதம்பரம் தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு அரவக்குறிச்சி தொகுதியும் ஒதுக்கி உள்ளார்கள்.
தி.மு.க கூட்டணியில் உள்ள ஐ.யு.எம்.எல் கட்சி ஏணி சின்னத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அவர்களுக்கு பாபநாசம் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக இந்த பட்டியலோடு விடுதலை சிறுத்தைகளுக்கான எட்டு தொகுதிகள் கொண்ட பட்டியலையும் தி.மு.க வெளியிட திட்டமிட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் வசம் இருந்த நாகப்பட்டினம் தொகுதியை ம.ம.க வுக்கு ஒதுக்கியதால், சென்னையில் ஒரு பொதுத்தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க தி.மு.க தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இதன்பிறகு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிகளை நாளை இறுதி செய்து வெளியிடவும் தி.மு.க தலைமை முடிவெடுத்துள்ளது” என்கிறார்கள்.




