5
April, 2026

A News 365Times Venture

5
Sunday
April, 2026

A News 365Times Venture

குமரி: 6 வாக்காளர்களுக்காக 125 கி.மீ தூரம் பயணிக்கும் மின்னணு இயந்திரம்! ஏன் தெரியுமா?

Date:

தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள், தேர்தல் விழிப்புணர்வு பணிகள், வாக்குப்பதிவு மையங்களில் பணியாளர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ​குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில் அதிக மலைக்கிராமங்களை உள்ளடக்கியது பத்மநாபபுரம் தொகுதி. மலைக் கிராமங்களில் வசிக்கும் காணி சமூக மக்கள் வாக்களிக்க வசதியாக மலைக்கிராமங்களில் சிலவற்றில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவது வழக்கம். மலைக்கிராமமான அப்பர் கோதையாறு பகுதியில் நீர் மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் இன்ஜினீயர்கள், ஊழியர்கள் சிலர் பணிசெய்து வருகின்றனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குச்சாவடி அமைத்து வாக்குப்பதிவு நடத்துவது வழக்கம். பத்மநாபபுரம் தொகுதியின் 1-வது வரிசை எண்ணைக் கொண்ட வாக்குச்சாவடி இதுதான்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

அப்பர் கோதையாறு மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்படுவது வழக்கம். குமரி மாவட்டம் பேச்சிப்பாறை வழியாக இந்த வாக்குச்சாவடிக்குச் சென்றால் நாகர்கோவிலில் இருந்து 50 கி.மீ. தூரத்தை கடந்தால் அங்கு சென்று விடலாம். ஆனால், கோதையாற்றில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் வாகனங்கள் செல்ல முடியாது. மின்வாரிய ஊழியர்கள் செல்வதற்காக விஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது.

விஞ்ச் வழியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்வது சிரமம். அதிலும் ஒரு விஞ்சில் இருந்து மற்றொரு விஞ்சுக்கு மாறி மாறி செல்லும் நிலையும் ஏற்படும். வாக்குப்பதிவு முடிந்து மின்னணு இயந்திரங்களை விஞ்ச் வழியாக இரவில் எடுத்துவர முடியாது. எனவே, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாகனங்கள் செல்லும் பாதை வரை வாக்குப்பெட்டி, வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்வார்கள். பின்னர் அங்கிருந்து கழுதைகளில் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது.

வாக்குப்பதிவு பணியாளர்கள் நடந்து அப்பர் கோதையாறுக்கு சென்று வந்தனர். வாக்குப்பதிவுக்குச் செல்லும்போதும், வாக்குப்பதிவு முடிந்து திரும்பும்போதும் வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களும் ஏற்படுவது உண்டு. இதனால் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இருந்து குமரி மாவட்டம் வழியாகச் செல்லாமல் திருநெல்வேலி மாவட்டம் வழியாக செல்வது வழக்கம்.

வாக்குப்பதிவு

நாகர்கோவிலில் இருந்து பணகுடி, களக்காடு, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, மாஞ்சோலை எஸ்டேட் வழியாக வாகனத்தில் அப்பர் கோதையாறு மின் உற்பத்தி நிலையத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை ஊழியர்கள் கொண்டு செல்கின்றனர்.

​வாக்குப்பதிவு முடிந்த பிறகு இந்த வாக்குச்சாவடியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அங்கு பணியாற்றும் அதிகாரிகளும், பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீஸாரும் குமரி மாவட்டத்தை வந்தடைய நள்ளிரவு ஆகிவிடும். கடந்த பல ஆண்டுகளாக 125 கி.மீ தூரம் சுற்றிச் சென்றடைகிறார்கள். அப்பர் கோதையாறு வாக்குச்சாவடியில் வெறும் 6 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். ஆறு வாக்காளர்களுக்காக 250 கிலோ மீட்டர் சுற்றி வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்படுவது ஆச்சர்யமே.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related